Sunday 31 December 2017

திரைத் தலைவனின் ஆன்மீக அரசியல்..

















ஒரு வயது தொடங்கி இன்று வரையில் இந்த ரஜினி என்கிற ஒரு திரை பிம்பத்தை காணும்பொழுதெல்லாம் ஓர் இனம் புரியாத ஒரு பூரிப்பு ஏற்படும். அந்த பூரிப்பு மிகவும் தூய்மையானதாகும்.
காரணம்,
குழந்தையின் ஒரு Innocence போன்று அதுவும் காரணமற்ற பேரானந்தத்தின் ஒரு தொடக்கப் புள்ளி.

சாகும் முன்னர் அவர் அருகில் நின்று அந்த அசாத்திய மனிதனின் அசாத்திய Energy’ஐ கொஞ்சம் திருடிக்கொள்ள வேண்டும் என்ற பேராசைகள் கூட பட்டதுண்டு.

அப்படி என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக விளங்குகின்ற பிம்பம் தான்
ரஜினிகாந்த்.

பாட்ஷா படத்தில் ஆட்டோக்காரனாக ஓடி வந்து பூசணிக்காயை தலையால் உடைத்த பொழுது *வாவ்* என்று வாயை திறக்கும்பொழுது அம்மா என் வாய்க்குள் இறங்காத காய்கறிகளை திணித்திடுவாள்.

முத்து படத்தில் தோளில் துண்டை மாற்றி மாற்றிப் போட்டு ரஜினியின் வசனங்களை மனப்பாடம் செய்து பேசிக்காட்டி பல முத்தங்கள் பெற்றதுண்டு.

படையப்பாவில் ரம்யா கிருஷ்ணனிடம் பேசுவதற்கு முன் ஒரு நடை நடப்பார்..அந்த நடை பழகுவதற்காக ஆயிரம் முறை சி.டியை தேய்த்ததுண்டு.. ஊஞ்சல் சீன் பார்க்கும்பொழுதெல்லாம் குதித்ததுண்டு.

கெட்ட பையன் சார் இந்த காளி என்ற பொழுது தலைவா என்று கூவியதுண்டு.

ஆம் தலைவன் தான்.
அந்த இருட்டு கூடாரத்தில் ஆயிரம் பேர் நடுவே,
அத்தனை பேரின் உள்ளத்தையும் கையகப்படுத்திக்கொள்ளும் அந்த ஆளுமை அந்த ஒரு மனிதனை தவிர இங்கு எவருக்கும் இல்லை என்பது மறுக்க முடியாத ஒன்று.

எத்தனை ஆயிரம் நடிகர்கள் வந்து போனாலும் இந்த ரஜினிகாந்த் எனும் ஆளுமையின் அருகில் கூட நெருங்கிவிட முடியாது. அது ஒருவகை சக்தி.
ஒரு அசாத்திய Super power.

ஆனால்,

அரசியல் என்று வரும்பொழுது..
இந்த இருட்டு கூடாரத்தையும் தாண்டிய ஒரு வெளிச்சமும் இருளும் மாறி மாறி வரக்கூடிய ஒரு உலகத்தை உடையது. இதில் ஆளுமை என்பதற்கு எவ்வகை அரசியல் அவசியம்?

அரசியல் என்பது என்ன?
தமிழகம் எவ்வகை மக்களின் ஒருங்கிணைந்த மாநிலம் ? தமிழகத்தின் வரலாறு என்ன? தமிழகம் கடந்து வந்த அரசியல் கொள்கைகள் என்ன?
அரசியலில் ஆயிரம் தத்துவ நிலைப்பாடுகள் உண்டு... அதில் எவ்வகை நிலைப்பாடு தமிழ்நாட்டிற்கு உரிய ஒன்றாக இருக்கும்?

அடிப்படை அமைப்பு மாற்றம் எப்படியாக இருக்கும்?
இந்தியா எனும் தேசத்திற்குள் இருந்தாலும் எந்தெந்த கொள்கைகளில் தமிழகம் தனித்து இருக்க விரும்புகிறது? ஏன் இந்தியை இங்கு திணிக்க முடியவில்லை?

சாதி மதங்கள் எப்படி இன்னுமும் ஒளிந்திருந்து அதற்கான தீணியை மறைமுகமாக பெறுகிறது. இதனை ஒழிப்பதற்கான வழி எவ்வாறாக இருக்கும்?

தமிழகத்தின் விவசாய கொள்கை, மீனவர்களின் துயரம், ஈழ அரசியலின் மீது தமிழகத்திற்கான நிலைப்பாடு, காவிரி நீர் பங்கீடுக்கான தீர்வு என ஆயிரம் அரசியல் நிகழ்கால பிரச்சனைகள் என ஏகப்பட்ட கேள்விகள் எழ தொடங்குகிறது.

இத்தனை வருடங்களின் எதிர்ப்பார்ப்பிற்கு பிறகு ரஜினி இந்த முடிவை எடுக்கிறார் என்றால்,
ரஜினி இதற்கெல்லாம் ஒரு நல்ல தீர்க்கமான செயற்பாட்டு வரைவுடன் வருவாரேயானால் அதை விடவும் மகிழ்ச்சி இந்த ரசிகனுக்கு வேறு இருக்காது.

ஆனால் ஒரு நிருபர்,
அவரிடம் உங்கள் கொள்கைகள் என்ன என்று கேட்ட பொழுது,
எனக்கு தலையே சுத்திடுச்சுனு சொல்லும்பொழுது, சற்று நெருடலாகவே இருந்தது என்பது தவிர்க்கமுடியாததாகிறது.

அறுபெத்தெட்டு வயதில் என்ன அரசியல் என்று கேட்பவர்களுக்கு,
காந்தி, பெரியார், காமராஜர் அரசியலில் வீரியம் நிறைந்து காணப்பட்டது இந்த 60’களில் தான் என்பது உரத்த உண்மை.

பழுத்த தெளிவு இருக்கும் வயது இது.. அரசியலுக்கு அறிவும், தெளிவும், அனுபவமும் மிக அவசியம். அது ரஜினிகாந்திடம் இருப்பதாகவே உணர்கிறேன்.

ரஜினியின் அரசியலில் அச்சம் ஏற்படுத்தும் மிக முக்கியமான குறியீடுகளில் முதன்மை எது என்றால்,

பொத்து பொத்தென்று அவர் தடுக்கும்பொழுதும் காலில் விழும் அவரது பக்தர்கள் தான்..
அந்த அடிமையாக விரும்பும் மனோபாவம் என்பது நல்ல தலைவனைக்கூட எங்கேனும் தவறிழைக்க நிச்சயம் வழி வகுக்கும்.

சுயமரியாதை தத்துவத்தை முன்னெடுத்து முன்னேறிய முதல் மாநிலத்தில் தான் காலில் விழுந்து, பிறகு காலையும் வாறி, உண்மையை புதைத்த கேவலத்திற்குரிய அரசியல் நடைபெறுகிறது.

அப்படிப்பட்ட தருணத்திற்கான மாற்றமாக தன்னை ரஜினிகாந்த் நிலை நிறுத்திக்கொள்ள முற்படும்பொழுது அவர் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை எவை என்பதற்கான தெளிவு மிகவும் அவசியம் ஆகிறது.
காரணம்,
இந்த தனிமனித துதிப்பாடல் அரசியலுக்கான Demerits இதுதான். தகுந்த Successor இல்லாமல் தவிப்பது. அந்த நிலையில் தான் திமுக’வும், அதிமுக’வும் இன்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

என்னதான் ரஜினி SuperHuman’ஆக இருந்தாலும் இயற்கை மனிதனுக்கு இந்த பூமியில் தவழ சில காலங்கள் தான் அருளியுள்ளது. எனவே தெளிவான அரசியல் தொடர்ச்சிக்கான வியூகமும் அவசியம்.

அரசியல் கட்சியின் கட்டமைப்பு என்பது தஞ்சை பெரிய கோவில், அங்கோர் வாட், தாஜ்மஹால், கேத்தோலிக் சர்ச்’களின் கட்டமைப்புக்கு தேவைப்படும் அறிவியலை விடவும் நுட்பமானது. 
அதற்கான அவர் திட்டங்கள் என்ன என்பதையும் கவனிக்க நேர்கிறது.

இத்தனைக்கும் பதில் கிடைக்கும் வரை
ரஜினிகாந்த், நீர் எனக்கு திரையில் மட்டுமே தலைவன்.

ஜனநாயக நாட்டில் எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கம்பு சுற்றினால்,
அதே ஜனநாயக நாட்டில் என்னை ஆள நினைக்கும் ஆளுமைக்கான தகுதியை விமர்சிக்க எமக்கும் சம உரிமை உண்டு என்பது மறுக்க இயலாத வாதம் ஆகிறது அல்லவா?

நான் நேசிக்கும் திரை அசாத்திய சக்தியே,
அரசியலில் நீர் நல்லது செய்ய வாழ்த்துக்கள்...
வாசகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நன்றி..

Sunday 17 December 2017

அருவிக்கு ஒரு கடிதம்



















சினிமா மொழி இலக்கணம் எல்லாம் நான் அறியாதவன்..சினிமா கையாள வேண்டிய உக்திகளோ, நம்பகத்தன்மையோ என்று இவைகள் எல்லாம் பேச ஆயிரம் வல்லுனர்கள் உள்ளனர். அவர்கள் ஆயிரம் என்ன? இலட்சம் குறைகள் கூட சொல்லலாம்.

ஆனால், அருவி... உன்னை கடந்து செல்ல விடாமல் மனம் என்னை தடுத்து உன் நினைவுகளில் உழன்று பிரள சொல்கிறது ஏனென்று அறியாமல் அலைகின்றேன்.

அருவிக்கு ஒரு கடிதம்,

நீ சிரிக்க வைத்தாய், காதலில் விழ வைத்தாய், ஏங்க வைத்தாய், பைத்தியம் ஆக்கினாய், அழுக வைத்தாய், கடைசியாக பிரிந்தும் சென்றாய்.

நீ கற்பனை தான் என அறிவேன்..

ஆனால் எங்கேனும் உன்னை பார்க்க விரும்புகிறேன்..பார்த்தால் இருக அணைத்துக்கொள்வேன்.. தந்தையின் உடல் வாசத்தை உனக்கு தர முயல்வேன்... கால்களை கண்ணீரால் நனைப்பேன்...

ஏன் உன்னை இத்தனை விரும்புகிறேன்?

*ஒடம்பெல்லாம் வலிக்குது.. தாங்க முடியாத வலி..ஆனா இந்த ஒலகத்துல வாழனும்னு ஆசையா இருக்கு.. அதனால வலிய தாங்கிக்கிறேன்*

உன்னை நான் தீவிரமாய் காதல் செய்ய,
நீ சொன்ன இந்த ஒரு வசனம் போதுமானது.

மெல்லிய பூக்களுக்குள்- நீ
ஒளிந்திருந்த பூகம்பம்,
சிகரெட்டு புகையினுள்- நீ
மறைத்து வைத்த மலர் வாசம்,

சின்ன சிரிப்புக்குள்- ஓர்
தத்துவ போதனை
அழகான உன் கண்களுக்குள்
அத்தனையும் வேதனை

உன்னை தேவிடியா என்றவர்களையெல்லாம் நீ தேவதை என சொல்லவைத்து வெற்றியும் கண்டு விட்டாய்.

உனை விடவும் பேரழகி இங்கு எவளும் இல்லையடி, அருவி.

ஐ லவ் யு அருவி.

மகளாக பிறப்பாயோ? வேண்டுகிறேன் இயற்கையை.



Sunday 12 November 2017

ஆறுவது காதலும் தான்…


காய்ந்த நிலமாக நான்
எனை நிரப்பும் நீராகிய அவள்
நிறை நிரப்பி இவ்வுறவை
நயம்பட நதியாக்கினாள்

அலைகின்ற மீன்கள் தான்
என்னுடைய காதல் என்பேன்
உனை நீங்கி விட்டால்
உயிர்த்தெழுவதில்லை

ஆழத்தில் மணல் போல
இன்பங்கள் சேர்த்தோம்
அகிலத்தின் அழகினை
பிரதிபலிப்பு செய்தோம்

எங்கள் உறவில்- அவளை
உறிவதற்கு சிலர்
உபயோகித்து உறவை
அசுத்தம் செய்ய சிலர்

அவளின் பாதுகாப்பென
சொல்லி அணை நிறுவினர்
வற்றிப்போய் வாடும்
காய்ந்த நிலமாக நான்

வற்றி நின்றேன்
வெயிலில் காய்ந்தேன்
உணர்ந்தேன்
நீர் அவள் அல்ல
காதல் தான் என்று

நிலம் நிரப்ப எண்ணி
கட்டிடம் கட்ட வேண்டாம்
எங்கேனும் ஊற்றடுத்து
எவளேனும் சேர்ந்திடுவாள்

ஆறுவது காதலும் தான்…




Saturday 8 April 2017

பார்க்காமலேயே..



உணர்வெல்லாம் நினைவொன்றின்
துணையுடனே கடந்திட்டேன்
கொடிய முதுமையை
கைத்தடிக்கொண்டு கடந்திட்டேன்
கண் மூடும் நேரமது நெருங்கி
வருதலை உணர்ந்திட்டேன்

மூச்சிரைக்கும் நேரத்தில்
கை பிடித்த மருத்துவரின்
கண் நோக்கிய போதுதான்
பேச்சுரைந்து போனதம்மா
சாகும் முன்னே பார்த்துவிட்டேன்
கண்ணம்மாவின் கண்களை மீண்டும்

நின் உடல் மட்டும் தான் எவர்க்கோ
உயிர் என்றும் எனக்குத்தான்என
கர்வத்துடன் உயிர் பிரிந்தேன்
மெட்டியில்லா அவள் கால் விரல்களை
பார்க்காமலேயே..



Sunday 26 March 2017

கடுகு - குற்றவுணர்வு.



















வணக்கம் தோழர்களே,

            விசாரணை என்ற திரைப்படத்திற்கு பின்னர் என் உறக்கத்தை கெடுத்த, சிந்திக்கச் செய்த ஒரு திரைப்படம்… விஜய் மில்டனின் *கடுகு*
எனவே, இந்த திரைப்படத்தின் கலை அம்சம், தொழில்நுட்பம், திரையாக்கம் என பேசுவதற்கு பல சினிமா வல்லுனர்கள் இங்கு வலம் வருகின்றனர். நான் ஒரு சராசரி மனிதனாக இந்த திரைப்படத்தை அணுக விரும்புகிறேன்.

ஆரம்பம் தொடங்கி இத்திரைப்படம் ஒரு மனிதனின் வாழ்க்கைப் போலவே நகர்ந்தது.. சராசரி மனிதனுக்கு என்னென்ன இன்னல்கள் இந்த உலகம் ஏற்படுத்தும் என்பதை இவ்வளவு அழகாக எவரும் விளக்கிவிட முடியாது என்றே தோன்றுகிறது..

*ஒரு கலை அழிகின்றதென்று தெரியும்பொழுதே, அந்த கலைஞனும் இறந்துவிடவேண்டும்*

*Blue film-ல நடிக்க கையெழுத்து போடுற பொண்ண Sunny வாழ்கனு சொல்லுவோம்,
வயித்து பொழப்புக்கு என்ன செய்யுறதுன்னே தெரியாம உடம்ப வித்தா தெவிடியாளுனு ஏசுவோம்*

*தப்பு செய்யறவங்கள விட தப்பு செய்யும்போது அத பார்த்துட்டு பேசாம போற உன்ன மாறி நல்லவங்கதான் ரொம்ப மோசமானவங்க

இது போன்ற வசனங்களெல்லாம் உலுக்கிவிடுகிறது..

புலியாட்டம் எனும் கலை… நிச்சயமாக என் மகன் பிறக்கும் காலத்தில் இருக்காது… அதை புத்தகத்தில் கூட வைத்திருக்கமாட்டோம்…
காரணம் கலைகளிலும் நாம் சாதிய ஆதிக்கங்களை செலுத்தி… கலைகளிலும் ஒரு வர்ணாசிரம ஏற்றத்தாழ்வினை உருவாக்கியுள்ளோம்..

நடனமென்றால் பரதம்…பாடலென்றால் கர்நாடக சங்கீதம் என்று.. அதிலும் வேற்றுமை..

என் மகனுக்கு நான் வயலின் இசையை இரசிக்க சொல்லிக்கொடுப்பேன்.. ஆனால் பறையிசையை பயிலவைக்க முயற்சியெடுப்பேன்… காரணம், , இந்த உலகில் ஏதேனும் புரட்சி உண்டாகவேண்டுமென்றால்.. கலையெனும் ஒரே ஒரு வழி தான் உண்டு… அந்த கலையின் வழி சாதியத்தை வென்றெடுப்போம்..

இதுபோல தான் புலியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கிராமிய இசை, சாமியாட்டம், ஒப்பாரி என எத்தனை கலைகள் அழியும் நிலையில் உள்ளது…

இத்தகைய தருணத்தில் அந்த புலியாட்டத்தின் சில நுணுக்கங்களை அத்துனை அழகாக எடுத்துரைத்து.. புலியாட்டம் ஆடுபவனின் பலம்… புலி போல் வேடம் மட்டும் பூணுவதில்லை, அவன் அந்த வேடம் பூண்டவுடன், அவனுள் ஊறிய அந்த புலியின் குணாதிசயங்கள் அவனை எத்துனை பலம் கொண்டவனாக மாற்றி எதிரியை வீழ்த்துகிறது என மிகவும் வீரியமாக எடுத்துக்காட்டிய விதம்.. சொல்லிக்கொண்டே போகலாம்…

மொத்தத்தில் இந்த திரைப்படம், இந்த சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தோலுரித்திருக்கிறது..

என்னை ஏன் இந்த சினிமா உறங்கவிடவில்லை என்பதற்கு என் வாழ்க்கையில் நடந்த இரண்டு நிகழ்வுகள் தான் காரணம்,

முதல் நிகழ்வு

பேருந்தில் பயணிக்கிறேன்..
பெண்ணொருத்தி நிற்கிறாள்..
பேடி ஒருவன் அவள் பின் உரசுகிறான்..
அவள் ஒதுங்குகிறாள்…
மீண்டும் உரசுகிறான்…
அவனை கேள்வி கேட்கவில்லை… மனதுக்குள் நான் அவனை திட்டித்தீர்க்கிறேன்…
ஆவடிக்கு டிக்கெட் எடுத்தவள், வாவின் ஸ்டாப்பிங்கிலேயே இறங்கிவிட்டாள்..
நான் ஏதும் செய்யவில்லை… மனதில் திட்டிக்கொண்டதோடு சரி…
ஒருவேளை நான் அன்று எழுந்து அந்த பெண்ணிற்கு என் இருக்கையை வழங்கியிருந்தால்… அவள் அந்த தொல்லையிலிருந்தும் தப்பியிருப்பாள், ஒரு பாதுகாப்பான சூழலையும் உணர்ந்திருப்பாள்.. ஆனால் நான் அதை செய்யவில்லை…
அன்று இரவு அவள் எப்படி உறங்கியிருப்பாள்??
ஒருவேளை நாளை அவள் அண்ணன், அப்பா என்று அவர்களின் தொடுதலைக்கூட ஒரு பாதுகாப்பற்ற தொடுதல் போல அவள் உணர நேர்ந்திருந்தால்??
நிச்சயம்.. அந்த நிகழ்வின் போது உரசிய அந்த ஆண் மட்டும் கெட்டவன் அல்ல, அவன் அந்த அவச்செயல் செய்தபோது… அப்பொழுது ஏதும் செய்யாமல் அந்த பெண்ணிற்கு நடந்த அநியாயத்திற்கு துணை சென்ற நானும் அவனை விட மோசமான ஒரு உயிரினம் ஆகிப்போனேன்..


இரண்டாவது நிகழ்வு…

ஒரு நாள் என் நெருங்கிய தோழி.. அவள் தந்தை வெளிநாட்டில் இருந்து ஒரு Branded Jeans வாங்கி அனுப்பி வைத்திருந்திருக்கிறார்… இவள் அதிகம் jeans அணியாதவள்… அன்று ஏதோ மிகுந்த ஆசையுடன் எந்த Jeans-ஐ அணிந்துக்கொண்டு ஒரு வேலையாக சென்றிருக்கிறாள்…

தெருவின் ஓரம் நடந்து சென்றிருக்கிறாள்… இரண்டு ஆண்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக பின்னே வந்து அவள் பின்னே தட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள்… அது மட்டுமின்றி.. அவளை சில வசைச்சொற்கள் சொல்லி நகைத்துவிட்டு சென்றனர்..


அங்கேயே அழுது சில நிமிடங்கள் நின்றிருக்கிறாள் என் தோழி..
ஒரு பத்து நொடிகள் அவளைப் பார்த்த அந்த பொதுஜனம், அடுத்த வினாடி அவர்கள் வேலையை பார்க்க தொடங்கிவிட்டனராம்… ஒருவரும் அவள் அருகில் வரவில்லை… அவள் செல்ல வேண்டிய காரணத்தை தவிர்த்துவிட்டு அழுதுக்கொண்டே வீடு திரும்பியவள்… யாரிடமும் இரண்டு நாட்கள் பேசவில்லை…

எனக்கு சில நாட்களுக்கு பிறகு தொலைப்பேசியில் அழைத்தாள்… அவள் பேச்சில் ஏதோ ஒரு வித்தியாசம் தென்பட்டதால்… நான் கொடைய.. அவளும் இவையனைத்தையும் அழுதுக்கொண்டே கொட்டித் தீர்த்தாள்..

ஆறுதல் கூரிய நான்… கடைசியாக அறிவுரை என்ற பேரில்.. ஒரு அசிங்கமும் செய்தேன்… இனி இந்த Jeans அணியாதே என்று அறிவுரை கூறினேன்..
அத்தனை நேரம் அழுத அவள்…
சத்தமாக சிரித்தாள்.. சிரித்துவிட்டு… எல்லா ஆம்பளைங்களும் இப்படித்தான்’ல என்றாள்..

பதில் அறியாது கூணிக்குறுகினேன்…
அன்று எனக்கு முதிர்ச்சியில்லை…பக்குவமில்லை… புரிதல் இல்லை…
இந்த திரைப்படத்தின் தாக்கத்திலிருந்து நான் இன்னும் மீளவுமில்லை…

இனி நான் என் கண்முன் நடக்கும் அநியாயத்திற்கு ஒரு துளி எதிர்வினையாகவாவது அமைந்திடுவேன் என்னும் உறுதியை இந்த சினிமா எனக்கும் ஏற்படுத்தியுள்ளது..

விமர்சிக்கவெல்லாம் எனக்குத்தெரியாது..

எனக்குள் குற்றவுணர்வை ஏற்படுத்தியதற்கு விஜய் மில்டனுக்கு நன்றி..


கடுகு- குற்றவுணர்வு.



Saturday 18 March 2017

சமத்துவம் பிறந்திட வேண்டும்..

வணக்கம் தோழர்களே,

            இன்று நான் எழுதக்கூடிய இந்த பதிவு.. நீண்ட நாட்களாக எழுதவேண்டும் என்று எண்ணிக்கொண்டே இருந்த பதிவு..
இன்று எழுதியே தீர வேண்டும் என்று முடிவுக்கு வந்ததன் காரணம்…. மூன்று பதிவுகள், அதைப் பற்றி பின்னே குறிப்பிடுகின்றேன் விளக்கமாக…

முதலில் எனக்கு இந்த Caste reservation மீது ஒரு  Positive approach உண்டான காரணத்தை விளக்குகிறேன்..

நான் பத்தாம் வகுப்பு படித்து வந்தபோது.. என் நண்பன்.. அவனும் என் பூர்வீகம் கொண்டவனே… என் சாதி வகுப்பைச் சேர்ந்தவனும் ஆவான்… அவன் அன்று என்னிடம் நான் கேள்வியே படாத ஒரு Information-ஐ சொன்னான்…

ஏதோ பேசிக்கொண்டிருந்தோம்… அப்பொழுது அவன் நல்ல Engineering college-ல சீட் கிடைக்கனும்னா நம்ம’லாம் 95-100% வாங்கனும்டா… எனக்கு இதயம் தூக்கி வாரிப்போட்டது… என்னடா சொல்ற? ஏண்டா?
Engineering Counselling, Medical counsellingனு வேலை வரைக்கும் எல்லாத்துலையுமே Caste based Reservation இருக்குடா… அந்தந்த சாதி அடிப்படைல அவங்களுக்கு ஒதுக்கீடு செய்வாங்க…
நம்ம OC
அதுக்கப்புறம் BC
அதுக்கப்புறம் MBC
கடைசியா SC/ST என்று எனக்கு சாதியை அறிமுகப்படுத்தினான்…எனக்கு அவன் 95% வாங்கவேண்டும் என்று சொன்னது மரண பீதியை கிழப்பியது…
டேய் மச்சான்… 95 லாம் எவ்வளோ முக்குனாலும் வாங்க முடியாதுடா.. அப்ப டுபாக்கூர் College தான் கிடைக்குமா…

அப்பொழுது அவன் இருந்த ஒரு குறுக்கு வழியையும் எனக்கு அறிமுகப்படுத்தினான்.. அது என்னவென்றால்.. சாதிச்சான்றிதழில் தன் சாதியை மாற்றி Forgery செய்வது…எப்படி ஒரு OC easy-ஆக BC,SC ஆவது என்று விளக்கினான்… அவன் அவனது சாதிச்சான்றிதழில் சுலபமாக மாற்றியது பற்றியும் விளக்கினான்… என் தலைக்கு மேல் என்னையே அறியாமல் இரண்டு கொம்புகள் முளைத்ததை உணர்ந்தேன்…

நேராக தந்தையிடம் வந்தேன்…எனக்கு சாதிச்சான்றிதழை மாற்ற வழி பாருங்கள்.. என் நண்பன் நம்மாளு தான்…அவன் மாத்திட்டானாம்… இல்லனா Opportunities கம்மியாம்… எனக்கு மாத்திடுங்க..

அப்பா சிரித்துவிட்டு… இதைத்தான் உன் பள்ளி கற்றுக் கொடுக்கிறதா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.. அவர் முகத்தில் கோபம் தென்பட ஆரம்பித்தது… எனக்கு கை கால்கள் உதறல் எடுத்தது…

இதன் பற்றிய அறிமுகப்படுத்தாதது என் தவறா? இல்லை பள்ளிக்கூடத்தின் தவறா? என புலம்பிக்கொண்டே ஆரம்பித்தார்..

கார்த்தி.. நம்ம சமூகம்..நம்ம சாதியைச்சேர்ந்தவர்கள் OC-GENERAL பிரிவுக்குள்ள வர்றோம்… இந்த பிரிவுல நிறைய சாதிகள் இருக்கு… இதையெல்லாம் உயர்ந்த சாதியாக கருதப்படுகிறது...
நீ படிக்கிறியா? ஆமா என்றேன்..
நான் படிச்சிருக்கிறனா? ஆமா என்றேன்..
ஐயா படிச்சிருக்காங்களா? ஆமா என்றேன்..
பாட்டையா? தெரியலையே…

பாட்டையாவும் படிச்சவர் தான்… வெளிநாட்டு வணிகத்துல எல்லாம் ஈடுப்பட்டிருக்கிறோம்… இவையெல்லாமே இந்த சாதியின் அடிப்படையில நம்ம பிறப்பு ஏற்பட்டதனாலதானே சுலபமா கிடைச்சுது…
சரி… ஆனா… எப்படி இந்த உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி எல்லம் உருவாச்சு…எப்படி இது உயர்ந்த சாதி இது தாழ்ந்த சாதினு பிரிச்சாங்க.. எனக்கு புரியல.. நம்ம என்ன செஞ்சோம் உயர்சாதில வர்றதுக்கு?

மனு அப்படின்னு ஒரு புறம்போக்கு இருந்தான்… அவன் ஒரு நீதி எழுதி வச்சுட்டு போயிட்டான்… அத புடிச்சிகிட்டு தொங்கி தான் இந்த பிரிவு ஏற்பட்டது…

அது என்ன நீதி…

அதை விளக்கும் அளவு எனக்கு தெரியாது.. ஆனால் நீ கேட்டதுக்கு பதில் சொல்லனும்னா.. ஒன்னே ஒன்னு சொல்றேன்… சாதிச்சன்றிதழ்-ல மாத்தனும்னு நீ கேக்குறது …
இத்தனை நாள் ஒருத்தனுக்கு கிடைக்கவேண்டிய ஒரு அடிப்படை உரிமையை நீ திருடுறதாகும்… இந்த System கொண்டு வந்ததோட முதன்மை நோக்கமே… வாய்ப்பு மறுக்கப்பட்டு… ஒடுக்கப்பட்டு… உன்னால நினைச்சுக்கூட பார்க்கமுடியாத இன்னல்களை சந்திச்ச ஒரு இனத்துக்கான ஒரேயொரு வாய்ப்பே இந்த இட ஒதுக்கீடு தான்… அதையும் நீ திருடனும்ங்கிற எண்ணம் வளத்துக்காத.. ரொம்பவும் தப்பு..

எனக்கு அப்பா சொன்னதுலயே.. ரொம்பவும் யோசிக்கவைச்சது… அவனது உரிமைய திருடுறதுனு சொன்னது… அப்ப தான் தேட ஆரம்பிச்சேன்…
எப்படிப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கெல்லாம் அந்தந்த இனத்தை சேர்ந்தவர்கள் அனுபவித்திருக்கிறார்கள் என்று…
அதையெல்லாம் படித்த பிறகு…முழுமையாக இதனை ஏற்பவனாக மாறிவிட்டேன்…

தற்போது.. மிகவும் Irritate செய்த அந்த இரண்டு மீம்களுக்கு வருவோம்..
முதல் மீம்..






சாதியை ஒழித்து மனிதத்தை வளர்த்திட சாதிய இட ஒதுக்கீட்டை அழித்திடவேண்டுமாம்.. ஏண்டா? உங்களுக்கு புரியவே புரியாதாடா?
சாமி சொன்னதா எதோ நாய் சொன்ன சாத்திரத்தை நம்பிக்குட்டு.. நம்ம பாட்டனுங்கெல்லாம் அவங்களுக்கு செய்த கொடுமைகளுனால அவர்களால இந்த சாதி ஒதுக்கீடுக்கப்புறமும் எந்திரிச்சு வர்றமுடியல… அதற்கு பலவேறு அரசியல் நோக்கங்கள் இருந்தாலும்… அவர்களின் முன்னேற்றத்துக்கு இருக்க அந்த ஒரெ ஒரு வாய்ப்பையும் புடுங்கனுமா டா?

சாத்திரத்தை நம்பி இருந்த நம்ம கண்ண தொறந்ததே அந்த மாமேதை அம்பேத்கர் ஐயாவோட சட்டம் தான்…

தீண்டாமை ஒரு பாவச்செயல்-னு எழுதி புத்தகம் போடுற நம்ம அரசாங்கம், அது இன்னும் நிலவுவத வச்சுத்தான் அரசியலே செய்யுதுங்குறது ஒரு வெட்கக்கேடு…

இரண்டாவது மீம்,



இந்த படத்த பாருங்களேன்… என்னமோ அனைத்து சலுகைகளையும் பிற்படுத்தப்பட்டோர் உரிந்துக்கொள்வது போலவும்… இந்த உயர்சாதி பெருமக்களுக்கு ஒரு துளி தான் மிச்சம் இருப்பது போலவும் ஒரு மாயையான பிம்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் உள்ளன..

இந்தியாவில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட தலித் சமுதாய தோழர்களின் வாழ்வாதார உயர்வு என்பது மிகவும் கணிசம் தான்… மிகவும் குறைவு… இந்தளவுக்கான ஒரு முன்னேற்றத்திற்கே இங்கு இவ்வளவு பயம் என்றால்… நினைத்துப் பாருங்கள் அனைவரும் முன்னேறிவிட்டால் ? பைத்தியம் ஆகிவிடுவார்கள் போலத்தான் தெரிகிறது..

படிக்கும்பொழுதே… Green Card-ஐ இலட்சியமாகக் கொண்டுள்ள நமக்கு எதற்கு இந்த கவலையெல்லாம் ? சொல்லுங்கள். ஒருவேளை அந்த இலட்சியம் நிறைவேறவில்லையென்றால் இந்தியாவிற்குள்ளே பீற்றிக்கொள்ளும் அளவில் ஒரு அரசு உத்தியோகம் பெற இந்த இட ஒதுக்கீடு தடையாக உள்ளதால் பொறாமையா?

உன் தாத்தன் படிச்சு… உன் அப்பன் படிச்சு… நீ படிச்சு.. உன் பரம்பரையே படிச்சு .. DNA – la யே கல்வியை வச்சிருக்கம்போது… ஒரு ஒடுக்கப்பட்ட பையன்… அப்பன் ஆத்தா கூலி வேலை பாத்து… அவன் பரம்பரையிலேயே அவனுக்கு தான் கல்வி ஒரு வாய்ப்பா அமையவே அவனுக்கு அந்த சட்டம் தான் உதவிருக்கு.. அந்த சட்டத்தையும் அழிச்சு… மறுபடியும் முதல்லர்ந்து… நீங்க மட்டுமெ படிச்சு… வாழ்க்கையில முன்னேறி.. இந்த மக்கள மீண்டும் ஒடுக்குவீங்க ல?? அதானே வேணும் உங்களுக்கும்…

இதுதான் சாதிய ஒழிச்சு மனிதத்த மக்களிடையே விதைக்குறதா?

இந்த கானொளியைப்பாருங்க…



என்று ஒரு உயர்சாதியைச்சேர்ந்தவன் மலம் அள்ளுகிறானோ.. அன்று
இந்த சாதிய இட ஒதுக்கீடு என்பது ஒழியட்டும்…
அதுவரையில் இது தொடரட்டும்..
பொறாமைப்படாமல் இதை ஏற்றுக்கொண்டுப் பயணியுங்கள்..

சாதி வேறொழிய வேண்டும்,
சமத்துவம் பிறந்திட வேண்டும்.



Wednesday 1 February 2017

கடல் தாயின் பிள்ளை நாங்கள்…



















கட்டுமரப் படகேறி
கடல் தாயின் துணையுடனே
காலமெல்லாம் மீன் பிடித்து
கருவாடும் கஞ்சியுமென
அரை வயிற்றை நிரப்பி வந்தோம்

நிலவொளியில் மிதந்து சென்று
மீன் அள்ள வலை விரித்தோம்
சிக்கியதோ சிங்கக்கொடிக் காவலரின்
துப்பாக்கிக் குண்டுகளே

வேற்றவன் தான் எம்மை
விரட்டினான் என நினைத்தால்
கூற்றுவனாய் மாறிப்போன
எம் காவலரும் அடித்தனரே

கிழவியின் கால் உடைத்தீர்
குழந்தையின் கை உடைத்தீர்
பெண்டிரின் சீலை அவிழ்த்தீர்
குடிசையில் தீ வைத்தீர்

என்ன தவறு யாம் இழைத்தோம்
இயேசப்பா
எம்மை காத்தருள் நீ

கடல் தாயின் பிள்ளை நாங்கள்…




ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...