Sunday 7 February 2016

”விசாரணை- முகவரியற்ற,குரலற்ற அப்பாவிச் சமூகத்தின் மீதான பார்வை”




















வணக்கம் நண்பர்களே!
முதல் வரியைக் கூட என்னை பதிவிட விடாமல், என் சிறு இதயத்தையும் அதையும் விட சிறிய மூளையையும் பாதித்த ஒரு சினிமாவை பற்றிய ஒரு கட்டுரையே இப்பதிவாகும்.
என்னுடைய பதிவுகளில், இதுவே  சினிமாவை பற்றிய முதல் கருத்துப்பதிவாகும்.

*விசாரணை*, வெற்றிமாறனின் மூன்றாவது திரைப்படம்.  ஐயா திரு. சந்திரகுமார் எழுதிய அவர்களது சிறைவாழ்க்கையை பற்றிய “LOCKUP” என்கிற நாவலை தழுவியே இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.
தமிழ் சினிமாவின் சிறந்த 10 படங்கள் என்று பட்டியலிட்டால் எந்தவொரு பட்டியலிலும் கண்டிப்பாக *விசாரணை* புறம் தள்ளப் படாது என்பது எனது ஆழமான நம்பிக்கை. அத்தனை மெனக்கெடல்கள் ஒரு படைப்பாளியாக வெற்றிமாறன் கண்டிருப்பதின் கூறுகள் படம் முழுக்க தெரிகிறது.
அப்பாவி இளைஞராக தினேஷ் மற்றும் மூவரது நடிப்பும் அபாரம். ஆனால் இவையனைத்தையும் விவரிக்க மற்றும் விமர்சனம் செய்ய பல்வேறு விமர்சகர்கள் உள்ளனர். இதை நான் செய்ய விரும்பவில்லை.

நான் இதைப்பற்றி பதிவிட விரும்புவது இத்திரைப்படம் என் மனதில் ஆழப்பதியச் செய்த சில கருத்து விதைகளை பற்றி தான்.

முதலில்,
பிற மாநிலங்களுக்கு சென்று வேலை செய்யும் முகவரியில்லா இளைஞர்கள் மீது காவல் துறையினரது பார்வையை பதிவு செய்திருக்கிறார்.                 மிகவும் கொடுமை என்னவென்றால் பிறர் செய்த தவறுக்கு தான் தண்டனை அனுபவிப்பதே ஆகும்.  உண்மை குற்றவாளி கிடைத்தாலும் அவன் செல்வாக்கு படைத்தவனாய் இருந்தால் யாரோ ஒரு அப்பாவியைக் கொண்டு அவனை சிறைப்பிடித்து.. செய்யாத்தவறை ஒப்புக்கொள்ளச் செய்து  அவனை சிறைவாசம் அனுப்பும் வழக்கம் நாம் அனைவருக்கும் தெரிந்ததவாகவே இருந்தாலும். அந்த அப்பாவியின் கண்ணீரையும், அவனது வலிகளையும், அவனை காவல்துறையினர் ஒப்புக்கொள்ள கையாளும் கொடூர மனிதத்தன்மையற்ற வன்கொடுமை முறைகளையும் துள்ளியமாக படமாக்கி நம் மனதை பதைபதைக்க செய்திட்டார் வெற்றிமாறன்.

ஒரு காட்சியில்,
அப்சல் எனும் அப்பாவி இளைஞன் படம் பார்த்துவிட்டு அவன் தங்கும் இடத்திற்கு சென்று கொண்டிருப்பான். அப்பொழுது ஒரு ஆந்திர காவல்காரர் அப்சலை அழைத்து,
உன் பெயரென்ன? என்பார்.
அப்சல், என்று அந்த இளைஞன் பதிலளிக்க
காவல் காரனதுஅடுத்த கேள்வி..
அல் கொய்தா வா? ஐ.எஸ்.ஐ.எஸ் ஆ?
இளைஞன் பதறியபடி அதெல்லாம் இல்ல சார். தமிழ்நாட்டுலர்ந்து வேல பார்க்க வந்திருக்கேன் சர்.
காவல் காரனது அடுத்த கேள்வி..
தமிழ் ஆ? ஒ L.T.T.E ஆ ?

இந்த காட்சி சில நிமிடங்களாகவே இருந்தாலும் இதனது தாக்கம் என்னை பல முனைகளில் சிந்திக்க செய்த்தது. இஸ்லாமியர்கள் அனைவரையும் தீவிரவாத அமைப்புகளோடு ஒப்பிடும் தன்மையும்.. தமிழன் மீது பிற மாநிலங்களில் அவர்களது பார்வையையும், போராளியை தீவிரவாத இயக்கங்களோடு இணைக்கிறார்களே என்ற ஆதங்கத்தையும் எழுத வேண்டுமென்றால் இன்னொரு கட்டுரை தான் எழுதவேணும்.

நாட்டின் சுதந்திரத்துக்கே வன்முறையை ஒரு வழியாய் நம்பாத இந்திய திருநாட்டில் , மக்கள் பாதுகாப்பிற்கெனவும்..சட்டம் ஒழுங்கின் சீரான இயக்கத்துக்கும் துணை புரியவேண்டிய காவல்துறையின் அமைப்பில் எவ்வளவு ஆழமாக வன்முறை உள்ளது என்பதையும், அதிகாரத்தின் ஆதிக்கத்தையும் , அப்பாவி மனிதர்கள் மீதான உரிமை மீறலையும் இரண்டு மணிநேரத்தில் இத்திரைப்படத்தை விட எதுவும் இவ்வளவு துள்ளியமாய் காட்டியிருக்க முடியாது.

கடைசியாக,
ஆயிரம் குற்றவாளி சட்டத்தின் பிடியிலுருந்து தப்பிக்கலாம் , ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பதை சிறு பிள்ளை முதலே கேட்டு வளரும் நாம் அனைவரும் . குற்றவாளியை தப்பிக்கச் செய்வதை கடைபிடிக்கும் நாம், நிரபராதியையே தொடர்ந்து தண்டிப்பதையும் கடைபிடித்துதான் கொண்டிருக்கிறோம். இந்த மாற்றம் மிகவும் அவசியம் ஒரு சமூகம் முன்னேறுவதற்கு.
இதுபோன்ற சினிமாக்கள் வரவேற்கத்தக்கவை. கொண்டாடத்தக்கவை. வழக்கு எண் 18/9 மறந்தோம். இதையும் காலப்போக்கில் மறந்துவிடக்கூடாதென்பது எனது ஆசையாகும்.                                           

நிச்சயம் அனைவரும் பார்க்கவேண்டிய படம். இதுபோன்ற சினிமாக்களை நாங்களும் தயாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று மார் தட்டிக்கொள்ளலாம். இது போல சமூக அக்கறை கொண்ட சினிமாக்கள் இச்சமுதாயத்தில் கொண்டாடப்பட்டால் நாம் பெரிய சமூக மாற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று பெருமையும், கர்வமும் கொள்ளலாம்.

திரு.வெற்றிமாறன்,திரு.தனுஷ், திரு.தினேஷ், ஐயா திரு. சந்திரகுமார் , திரு.சமுத்திரக்கனி மற்றும் அத்திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் இதுபோன்ற சமூக அக்கறைக்கொண்ட ஒரு படத்தை படைத்தமைக்கு சிரம் தாழ்த்திய நன்றிகளும் வாழ்த்துக்களும்.


ஒரு வரியில்,                                                                                                      

விசாரணை- முகவரியற்ற, குரலற்ற அப்பாவிச் சமூகத்தின் மீதான பார்வை.





No comments:

Post a Comment

ஈழத்தில் நான்

வணக்கம் நண்பர்களே, பல நாட்களுக்கு பிறகாக பதிவிடுகிறேன். இது ஓர் பயணப்பதிவு. ஈழத்தில் நான், ஆகத்து 10, என் வாழ்வின் மிக உன்னதமான, மி...